திருப்புள்ளம் பூதங்குடி பெருமாள் கோவில்
திருப்புள்ளம் என்னும் பூதங்குடி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
இறைவன்
*வல்வில் இராமன்*
இறைவி
*பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)*
கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது.

இந்த பூவுலகில் பிறந்த அனைவருக்கும் எல்லாவிதமான சௌகரியங்களும் வேண்டும் என்றால் அந்த பரிபூரண பாக்கியத்தை அள்ளித் தருபவர் பகவான் ஸ்ரீ நாராயணன் மட்டும்தான். படைத்தலை பிரம்மா செய்தாலும் அழித்தலை சிவபெருமான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இடைப்பட்ட காலமாக ‘ காப்பாற்றுதலை’ விஷ்ணுவே பொறுப்பேற்று செய்வதால் அவரை வணங்கினால் வாழ்வு, வசதி, யோகம், அதிர்ஷ்டம் போன்ற அனைத்துச் செல்வங்களும் கிடைப்பதோடு அறிதற்கரிய மோட்சத்தையும் தருபவர் அவர்தான். மனிதர்களுக்கு மட்டுமல்ல ஜடாயுவுக்கும் மோட்சம் அளித்தாரே, அந்த புனிதமான இடம் தான் திருப்புள்ளம் பூதங்குடியாகும்.
கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை வழியாக திருவைகாவூர் பேருந்துப் பாதையில் சுவாமிமலைக்கு 4 கிலோமீட்டர் தொலைவில், அகோபில மடத்தின் நிர்வாகத்தில் திருப்புள்ளம் பூதங்குடி வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. பகவான் புஜங்காசனம். கிழக்கு முக தரிசனம். ஐயா பொற்றாமரையாள். ஹேமா அம்புஜவல்லி. தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். க்ருத்ர தீர்த்தம். சோபன விமான சேர்வை. பகவான் ஸ்ரீ இராமபிரானுக்ம் க்ருத்ர ராஜனுக்கும் நேரடியாக தரிசனம் கொடுத்த புண்ணிய ஸ்தலம்.
சீதாபிராட்டியைத் தேடி அலைந்து கொண்டிருந்த ஸ்ரீராமனுக்கு ஜடாயுவின் முனகல் சத்தம் கேட்டது. ஓடிப்போய் ஜடாயுவை ஆசுவாசப்படுத்த முயலும் பொழுது ஜடாயு, ஸ்ரீ ராமா உன் பதிவிரதை இராவணேஸ்வரனால் கடத்தப்பட்டு இவ்வழியே சென்றார். நான் இடைமறித்து வானத்தில் பறந்து கொண்டிருந்த இராவணனோடு போராடி சீதா தேவியை காப்பாற்ற நினைத்தேன். ஆனால் இராவணனும் என் இரண்டு சிறகுகளையும் வெட்டிவிட்டான். உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். உன் கையால் எனக்கு மோட்சத்தைக் கொடு என்று விருப்பப்பட்டு கேட்டான் ஜடாயு.

கழுகின் அரசனான ஜடாயுவை கட்டித்தழுவி அவன் படும் கஷ்டத்தை கண்டு கலங்கிய இராமன், ஜடாயுவின் விருப்பப்படியே மோட்சத்தை தந்தான். எனினும் ஜடாயுவின் மரணம் ஸ்ரீராமனை கலக்கிக் கொண்டே இருந்தது. அதனால் உள்ளமும் உடலும் வாட அப்படியே இந்த தலத்தில்தான் சில காலம் சிராமபரிஹரம் செய்து கொண்டதாக வரலாறு.

சீதை இல்லாத ஸ்ரீராமன் என்பதா ஸ்ரீராமருக்கு அருகில் அவனுக்கு உற்ற துணையாக பூமி பிராட்டி அமர்ந்திருக்கிறாள். உற்சவமூர்த்தியான ஸ்ரீ ராமனுக்கு சதுர்புஜங்கள் உள்ளது.
ஜீயர் ஸ்ரீ ஸ்ரீனிவாஸ யதீந்திர மகாதேசிகன் உடைய பிருந்தாவனம் ஒன்று இங்கு உள்ளது. திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்கள் இந்த கோயிலை பற்றி இயற்றியிருக்கிறார்