துளசி தேவியின் மகிமை மற்றும் பலன்கள்:
எந்த வீட்டில் துளசி செடி தினமும் வணங்கப்படுகிறதோ அங்கே எமதூதர்கள் தைரியமாக நுழையமாட்டார்கள். அதுமட்டுமல்ல பூதங்கள், ப்ரேதங்கள், பிசாசுகள் மற்றும் கெட்ட ஆவிகள் கூட அந்த வீட்டிலிருந்து வெகு தொலைவைலேயே இருக்கும். அனைத்து முப்பத்து முக்கோடி தேவர்களும் துளசிச் செடியில் வாசம் செய்கிறார்கள்.

துளசி செடி
எங்கெல்லாம் துளசி வனம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பரமாத்மா, லட்சுமி, பிரம்மா மற்றும் மற்ற தேவதைகளுடன் அங்கு வாசம் செய்வார்.
மகாதேவர் சிவன் அன்னை பார்வதி தேவியிடம் கூறுகிறார் :
“நான் துளசி தேவிக்கு சாஷ்டாங்கமாக வீழ்ந்து என் வணக்கத்தை செலுத்துவேன். துளசி தேவியின் தரிசனம் கிடைக்கப் பெற்றவர்களுடைய அனைத்து பாவங்களும் முறியடிக்கப்படும்.”
ஆதாரம் பத்மபுராண பாதாளக் காண்டம் 76-66
ஸ்ரீ மகாவிஷ்ணு / ஸ்ரீ மகாலெட்சுமியின் தாமரைப் பாதங்களை அடைய வேண்டும் என்றால், துளசி தேவியை வழிபட்டு அனைவரும் பக்தியில் முன்னேறி உன்னத ஆன்மீக தம்பதிகளாக மாற பரமாத்வாவின் பாதங்களை சரண் அடையுங்கள்.
துளசி தேவியின் மகிமைகள்
அனைத்து வகையான செடிகளில் துளசி செடி மட்டும் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகின்றது. வேதங்களிலும், புராணங்களிலும் பலர் இதப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் இதனை அறிந்து இருக்கவில்லை. அதன் பயனென்ன என்பதை விளக்குவதற்கு சாஸ்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பயனுள்ள கருத்து.
எந்த வீட்டில் துளசி செடி தினமும் வணங்கப்படுகிறதோ அந்த இடத்தில் மகாலெட்சுமி வாசம் பண்ணுகிறாள் என்பது உண்மை. எந்த ஒரு மனிதன் விஷ்ணுவை துளசி தளங்களை கொண்டு பூஜிக்கிறானோ, அவன் தாய்ப்பால் கூட அருந்தத் தேவையில்லை. அதாவது அவருக்கு மறுபிறவி இல்லை.
துளசி தேவிக்கு வேளா வேளைக்கு பூஜை செய்ய வேண்டும். துளசியின் இலை, பூ, கனி, வேர், கிளை, தோல் மற்றும் மண் அனைத்தும் புனிதமானவை. இறந்த ஒரு உடல் மரக்கட்டைகளுடன் எரியும்போது அதனுடன் ஒரு துளசிக் குச்சி இருந்தாலும் அந்த ஜீவனுடைய கோடிக்கணக்கான பாவங்கள் அதனுடன் சேர்ந்து அழிக்கப்பட்டு விடும். அதுமட்டும் அல்ல ஜீவன் முக்தி அடையும்.

யார் ஒருவர் அனுதினமும் துளசியை கவனித்து பராமரித்தல், தொடுதல், வணங்குதல், பூஜை செய்தல், மந்திரங்கள் வாசித்தல், சுற்றி வலம் வருதல், நீர் வார்த்தல், நித்ய பூஜை செய்தல் மற்றும் நமஸ்கரித்தல் போன்ற ஒன்பது விதமான பக்தி நிலைகளை துளசிக்கு செய்கிறாரோ அவருடைய புண்ணியம் கோடிக்கணக்கான யுகங்களுக்கு நிலைத்து நிற்கும்.
பிரம்ம வைவர்த புராணம்
ஸ்ரீ ஹரிக்கு ஆயிரக்கணக்கான அமிர்த குடங்களால் அபிஷேகம் செய்தாலும் அவர் அதனால் திருப்தி அடைவதில்லை. அதைவிட ஒரே ஒரு துளசி தளங்கொண்டு வணங்கினாலும், அதில் திருப்தியடைந்து விடுவார் மகாவிஷ்ணு பெருமாள்.
ஒருவர் பத்தாயிரம் பசுமாடுகளை தானம் செய்வதன் மூலம் என்ன பயன் அடைவாரோ, அதே பலன் ஒரு துளசி தளத்தை தானம் செய்வதன் மூலம் பெற முடியும்.

துளசி நீர்
இறந்து கொண்டிருக்கும் ஒருவர் துளசி இலை கலந்த நீரை அருந்தினால் (ஸ்ரீ ஹரிக்கு படைக்கப்பட்ட பிறகு) அவருடைய அனைத்து பாவங்களும் நீக்கப்பட்டு, அவர் விஷ்ணுலோகம் அடைவார்.
ஸ்ரீ ஹரிக்கு ஒருவர் துளசி இலை கலந்த நீரைப் படைத்துப்பின் அதை பக்தியுடன் அருந்தினால் அவர் ஜீவன் முக்தி அடையும் மற்றும் அவர் கங்கையில் நீராடிய பலனை அடைவார்.
எவர் ஒருவர் ஸ்ரீ ஹரிக்கு தாமரைப் பாதங்களில் துளசி இலைகளை சமர்ப்பிக்கிறாரோ, அவர் ஒரு இலட்சம் அசுவமேத யாகங்களை நடத்திய பலனை அடைவார். அதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.