சென்னை – செங்கல்பட்டு சாலையில் வண்டலூரை அடுத்துள்ளது. காளத்தீஸ்வரர் கோயில். இது, திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், காளஹஸ்திக்கு இணையான தலம். காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி – பொத்தேரிக்கு அடுத்துள்ளது காட்டாங்குளத்தூர்.

தன் கணவரான சிவபெருமானை மதியாமல், தந்தை தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்று, தட்சனால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயணி, பிராணத் தியாகம் செய்தாள். இதையறிந்த சிவனார், தம் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, தட்சனின் யாகத்தை அழித்தார். பிறகு தேவியின் திருமேனியைச் சுமந்தபடி உன்மத்த நடனம் ஆடினார். அப்போது தேவியின் திருமேனி அங்கங்கள் பூமியில் பல பாகங்களில் விழுந்து சிதறின. அந்த இடங்களே சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.
பின்னர் பூமிக்கு வந்து யோகம் மேற்கொள்ளத் திருவுள்ளம் கொண்ட ஈசன், தாம் யோகம் செய்வதற்கு ஏற்ற இடத்தைப் பூமியில் தேர்வு செய்வதற்காக, தம் கழுத்தில் இருந்த நாகத்தை அனுப்பினார். நாகம் அடையாளம் காட்டிய ஐந்து இடங்களில் முதலாவது தலம் காளஹஸ்தி. இரண்டாவது தலம் காட்டாங் குளத்தூர். மற்றவை திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும் பள்ளம் ஆகிய தலங்கள் என்கின்றன ஞானநூல்கள். நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றான காட்டாங் குளத்தூரில் ஐயன் காளத்தீஸ்வரர் என்னும் திருப்பெயருடனும், அம்பிகை ஞானாம்பிகையாகவும் அருளும் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. தெற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் ஐயன் கிழக்கு நோக்கி அருள்கிறார். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்பு வாகத் தோன்றியதாகவும், மகரிஷி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு அருளும் ஈசன் சுயம்பு மூர்த்தம் என்பதாலும், அதிக சக்தி கொண்டவர் என்பதாலும், இந்தப் பெருமானை நந்திதேவர் நேராகப் பார்த்து வழிபடாமல், சுவரில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகத் தரிசித்து வழிபடுகிறார். இந்த நந்திதேவர் `ஆபரண நந்தி’ என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறார். நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிபட்டுத் திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம். அதற்கேற்ப இந்தக் கோயிலில் ராகுவும் கேதுவும் ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும் நவகிரகங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக அமைந்திருப்பது சிறப்பம்சம். தனிச் சந்நிதியில் தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீஞானாம்பிகை சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறாள்.ஆலயத்தை வலம் வரும்போது, வலம்புரி விநாயகர், குரு பகவான், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், விஷ்ணுதுர்கை ஆகியோரைத் தரிசிக்கலாம். பிரதோஷம், சஷ்டி, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி போன்ற தினங்கள் விசேஷமாகக் கொண்டாடப் படுகின்றன. சித்ரா பௌர்ணமி நாளில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. ராகு – கேது, குரு, சனிப் பெயர்ச்சிகளின்போது சிறப்புப் பரிகாரப் பூஜைகள் நடைபெறுகின்றன.